×

பெரம்பலூரில் பைக் திருடிய வழக்கில் 3 பேர் கைது: மைனருக்கு ஜாமீன்

பெரம்பலூர், செப்.24: பெரம்பலூரில் பைக் திருடிய வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மைனருக்கு மட்டும் ஜாமீன் வழங்கி மற்ற இருவரை சிறையிலடைத்தனர். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் விஜய்ஆனந்த்(40). மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 14 ஆம்தேதி மாலை 4 மணியளவில் தனது நர்சிங் ஹோம் முன்பு தனது பைக்கினை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் இரவு 11 மணிக்கு திரும்பி வந்து பார்த்த போது தனது பைக்கை காணவில்லை. இதுதொடர்பாக டாக்டர் விஜய் ஆனந்த் கொடுத்தப் புகாரின்பேரில் பெரம்பலூர் சப்.இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து பைக் திருடிய ஆசா மிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று(23ம் தேதி) பெரம்பலூர் பெரியார்சிலை பின்புறம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் எலி என்கிற வெங்கடேசன் (18), பெரம்பலூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் பாலாஜி (20) ஆகிய இருவர் மற்றும் பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மா பாளையத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய பேர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் மூவரும் தான் விஜய் ஆனந்த் நர்சிங் ஹோம் முன்பு நிறுத்திச்சென்ற பைக் கினை திருடிச் சென்றவர்கள் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் 3 பேர்களையும் கைது செய்து, அதில் எலி என்கிற வெங்கடேசன், பாலாஜி ஆகிய இருவரையும் பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். 17 வயது சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுவித்தனர்.

Tags : Perambalur ,Minor ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...